தமிழ்நாடு செய்திகள்

அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு பர்கூர் மலைப்பாதையில் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

Published On 2023-08-23 10:49 IST   |   Update On 2023-08-23 10:49:00 IST
  • பொதுமக்கள் போராட்டம் காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றன.
  • வாகனங்களில் வந்த ஏராளமானவர்களின் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலை கிராமம் தாமரைக்கரை பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இந்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை அந்தியூர்- மைசூர் மெயின் ரோடு தாமரைக்கரை பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் போராட்டம் காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாத்திப்பு ஏற்பட்டது.

இந்த ரோடு அந்தியூர்- மைசூர் செல்லும் பிரதான சாலையாக உள்ளதால் வேலைக்கு செல்பவர்கள், மற்றும் அலுவலகம் செல்பவர்கள் என வாகனங்களில் வந்த ஏராளமானவர்களின் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன.

மேலும் பர்கூர் மலை கிராம பகுதிகளில் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. அந்தியூரில் இருந்து பர்கூர் பள்ளிக்கு இன்று காலை சென்ற வேன்களும் செல்ல முடியாமல் ரோட்டோரம் நிறுத்தப்பட்டன. இதனால் ஆசிரிய- ஆசிரியைகளும் சரியான நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News