தமிழ்நாடு

வன்முறையை தூண்டியதாக சீமான் மீது திருச்சி காவல்துறை வழக்கு

Published On 2023-03-25 11:15 GMT   |   Update On 2023-03-25 17:21 GMT
  • சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.
  • திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் அமைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருச்சி:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்களை திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யக் கோரி திருச்சியில் நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து பொதுக்கூட்டம் போன்று மேடை அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசும்போது, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

இதையடுத்து, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது, சட்டவிரோதமாக கூடுதல், கலகம் செய்ய தூண்டுதல், அமைதியை சீர்குலைக்க தூண்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சீமான் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் மீது திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News