தமிழ்நாடு

தூத்துக்குடி, கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி

Published On 2022-08-01 06:13 GMT   |   Update On 2022-08-01 06:13 GMT
  • கோவில்பட்டி குமாரபுரம் ரெயில் நிலையம் அருகே ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • வீட்டருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் கடந்து சென்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி துறைமுகத்திற்கும் மீளாவிட்டானுக்கும் இடையே உள்ள பெரியசாமி நகர் உப்பாற்று ஓடை ரெயில்வே மேம்பாலத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் இறந்து கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 25) லாரி டிரைவர் என்பதும், இவர் தூத்துக்குடி துறைமுகம் சென்ற சரக்கு ரெயிலில் அடிபட்டு இறந்திருப்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி குமாரபுரம் ரெயில் நிலையம் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்த செல்லப்பாண்டி (வயது 54 ) என்பது தெரியவந்தது.

இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இன்று காலை 6 மணிக்கு வீட்டருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் கடந்து சென்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News