தமிழ்நாடு

கன்னியாகுமரியில் ஆபத்தை உணராமல் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்

Published On 2024-01-05 04:29 GMT   |   Update On 2024-01-05 04:29 GMT
  • முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுகிறார்கள்.
  • கடற்கரையை ஒட்டி கடல் நடுவே உள்ள ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம், பத்ம நாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டை, சங்கு துறை-சொத்தவிளை, கணபதிபுரம் உள்ளிட்ட கடற்கரைகள் என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை என பல இடங்கள் இருக்கும் கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பல மாநிலங்களை சேர்ந்த வர்கள், வெளிநாட்டினர் சுற்றுலாவாக வருகிறார்கள்.

சூரிய உதயம், அஸ்தமனம் இரண்டையுமே கன்னியாகுமரியில் பார்க்கலாம். குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வருபவர்கள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்க்க தவறுவதில்லை. அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுகிறார்கள்.

மேலும் கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து மகிழ்வார்கள். அது மட்டுமல்லாமல் சிறந்த ஆன்மீக தலமாகவும் கன்னியாகுமரி திகழ்கிறது. இங்குள்ள பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கும் சுற்றுலா பயணி கள் செல்கின்றனர். கன்னியாகுமரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் இந்த மாதங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும். அதோடு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வருகையும் இந்த மாதங்களில் அதிகமாக இருக்கும்.

இந்த ஆண்டும் சீசன் காலமான தற்போது கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதுவும் சபரிமலைக்கு செல்லக்கூடிய அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் கன்னியாகுமரியில் திரும்பிய இடமெல்லாம் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது.

அவர்கள் விவேகானந்தர் மண்டபத்தை காண படகு போக்குவரத்து தொடங்கு வதற்கு முன்பே படகு குழாம் முன்பு நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். பராமரிப்பு மற்றும் பாலம் பணிகள் காரணமாக திருவள்ளுவர் சிலையை பார்க்க சுற்றுலா பயணிகள் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை.

சுற்றுலாவை ஆனந்தமாக கொண்டாடும் நோக்கத்தில் கன்னியாகுமரிக்கு வருபவர்களில் சிலர் ஆபத்தை உணராமல் செயல்படுவது தான் அதிர்ச்சிகரமான விஷயமாக உள்ளது. கன்னியாகுமரி கடலில் அவ்வப்போது ராட்சத அலைகள் எழும். காற்றின் வேகமும் அதிகமாகும்.

இதனால் கடற்கரையை ஒட்டி கடல் நடுவே உள்ள ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பாறைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி சிலர் அங்கு சென்று விடுகிறார்கள்.

அவ்வாறு தடையை மீறி செல்பவர்கள் பாறைகளில் அமர்ந்தும், நின்று கொண்டும் செல்போனில் செல்பி எடுக்கின்றனர். மேலும் சிலர் குரூப்பாக நின்று போட்டோ எடுக்கிறார்கள். அவர்கள் பாறைகளுக்கு செல்லும் வழியும், பாறைகள் மீது நிற்பதும் ஆபத்தானது என போலீசார் எச்சரித்துள்ள போதிலும் பலர் கண்டு கொள்வதில்லை.

தற்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்று அதிகமாக அடித்து வரும் நிலையிலும் இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப, இளைஞர்கள் பலரும் ஆபத்தான பகுதிகளுக்கு சர்வசாதாரணமாக சென்று வருகின்றனர். அதனை தடுக்க அந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த விஷயத்தில் போலீசார் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பது ஒரு புறம் இருந்தாலும், ஆபத்து என தெரிந்தும் அந்த பகுதிகளுக்கு செல்வோர் தங்களின் எதிர்காலம், குடும்பம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கவனமாக செயல்படவேண்டும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.

Tags:    

Similar News