தமிழ்நாடு
தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் தொடங்கியது: பங்காரு அடிகள், சங்கரய்யாவுக்கு இரங்கல் தீர்மானம்
- தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை தொடங்கியது.
- மறைந்த முக்கிய பிரமுகர்களுக்கு சபாநாயகர் இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
சென்னை:
தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு, மறைந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கும்மிடிப்பூண்டி கி.வேணு, வெங்கடசாமி, பா.வேல்துரை ஆகியோரது மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது.
அதன்பிறகு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் தீர்மானங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
இதைத் தொடர்ந்து மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுனம் கடைபிடித்தனர்.