தமிழ்நாடு (Tamil Nadu)

6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படைக் கணினி அறிவியல் மற்றும் ஏஐ பாடத்திட்டம்

Published On 2024-06-24 11:09 GMT   |   Update On 2024-06-24 11:10 GMT
  • அரசுப் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.58 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
  • ரூ.1.14 இலட்சம் மதிப்பீட்டில் சொந்த நூலகங்களுக்கான விருது வழங்கப்படும்

பள்ளிக் கல்வித் துறையின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் இடம் பிடித்துள்ள முக்கியம்சங்கள் பின்வருமாறு-

1. அரசுப் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.58 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

2. இவ்வாண்டு பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைர விழா ஆண்டாகும். இதனையொட்டி, தேசிய அளவிலான முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு வைர விழா ஜாம்போரி (Diamond Jubilee National Jamboree) ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும்.

3. காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கல்வி ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

4. ஆளுமைத் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

5. 6  முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படைக் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன் பாடத்திட்டம் தயார் செய்து ஆசிரியர்களுக்குப் பயிற்சியும், மாணவர்களுக்கு மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சார்ந்த அடிப்படைத் திறன்களும் கற்றுக் கொடுக்கப்படும்.

6. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.42 கோடி செலவில் அமைக்கப்படும்.

7. எந்திரனியல் ஆய்வகங்கள் (Robotics Labs)

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்க்கவும், குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனைக் கற்றுக் கொள்ளவும், படைப்பாற்றலை வளர்க்கவும் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் 38 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் எந்திரனியல் ஆய்வகம் (Robotics Lab) ரூ.15.43 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

8 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் புலன் உணர்வுத்திறன், அறிவுத்திறன், பெருந்தசை இயக்கத்திறன் மற்றும் நுண்தசை இயக்கத்திறன் ஆகியவை மேம்படுவதற்காக ஒரு மாவட்டத்திற்கு ஒரு "பல்வகைத் திறன் பூங்கா" என 38 மாவட்டங்களில் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

9. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றித் தொடர்ந்து பள்ளிக்கு வருகைப் புரியும் பொருட்டு அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்படும் இடையூறுகளில் இருந்து தங்களைக் பாதுகாத்துக் கொள்ளவும், இணையதள பயன்பாடுகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்து வழிகாட்டுதல் வழங்கவும் "அகல் விளக்கு" என்ற திட்டம் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

10. இக்கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பங்கேற்கும் வகையில் கலைத் திருவிழா நடத்தப்படும்.

11. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே ஏற்றுக்கொள்ளும். இதற்கென ஆண்டுதோறும் ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

12. "நம்ம School நம்ம ஊரு பள்ளி" திட்டத்தின் வாயிலாகத் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குப் பங்களிப்புகளைத் திரட்டுவதற்கும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்துடன் (ICTACT) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மேற்கொள்ளப்படும்.

13. ஆறு மாவட்டங்களில் செயல்பட்டுவரும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ரூ.41.63 கோடி மதிப்பீட்டில் தகைசால் நிறுவனங்களாகத் தரம் உயர்த்தப்படும்.

14. பன்முகத் திறமையாளராக ஆசிரியர்களை மேம்படுத்தும் வகையில் ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் திறன்வளர் பயிற்சி வழங்கப்படும்.

15 1000 ஆசிரியர்களுக்குத் தொல்லியல் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டது. இவ்வாண்டில் இரண்டாம் கட்டமாக, மேலும் 1000 ஆசிரியர்களுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் தொல்லியல் பயிற்சி வழங்கப்படும்.

16. மாணவர்களின் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்துதலை அறவே தவிர்க்க உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, உயர்கல்வித் துறை ஆகியவற்றுடன் சேர்ந்து கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படும். இத்திட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

17. தூத்துக்குடி மாவட்டத்தில் வாசகர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட மைய நூலகத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

18. பார்வைத் திறன் குறைபாடுடைய மாணவர்கள் நலனுக்காக மாவட்ட மைய நூலகங்களில் கணினி மற்றும் எழுத்துணரி மென்பொருள் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

19. அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வருகை தரும் சிறுவர்களின் அறிவியல் அறிவினை மேம்படுத்தும் வகையில் அறிவியல் சாதனங்கள் கொண்ட சிறார் அறிவியல் பூங்கா ரூ.80.24 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

20. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன் நூலகங்களுக்கான புதிய சேவைகள்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன் மொழிபெயர்ப்பு, நூல் சுருக்கம், மறுஉருவாக்கம், காணொளிகள் எழுத்தாக்கம் போன்ற புதிய சேவைகள் மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் முழுநேரக் கிளை நூலகங்களில் வாசகர்கள் பயன்பெறும் வகையில், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மூலம் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

21 ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்துச் சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து ஊக்குவிக்க ரூ.1.14 இலட்சம் மதிப்பீட்டில் சொந்த நூலகங்களுக்கான விருது வழங்கப்படும்.

22. தமிழ் இலக்கியம், தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பண்பாட்டை எடுத்துக்காட்டும் நூல்களை ஆங்கிலம் மற்றும் தென்னிந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதற்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் "திசைதோறும் திராவிடம்" என்ற திட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பிற இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

23. தமிழ்நாட்டின் பண்பாடு, கட்டடக்கலை, சிற்பக்கலை, நாட்டுப்புறக் கலைகள், தனித்துவமான உணவு வகைகள், புவிசார் குறியீடுகள் போன்றவற்றைக் உள்ளடக்கிய புகைப்பட ஓவிய நூல்கள் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் "மிளிரும் தமிழ்நாடு" என்ற பெயரில் பரிசுப் பதிப்புகளாக வெளியிடப்படும்.

24. வணிகவியல் மற்றும் கணக்கியல் பாடங்களைப் பயிலும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் பட்டயக்கணக்காளர் அடிப்படைத் தேர்வுக்கான நூல்கள் தமிழ் கலைச் சொற்களோடு கூடிய வெளியீடாக ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.

25. இணையதள மேம்பாடு மற்றும் விற்பனை முகவர்கள் மூலமாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகப் புத்தகங்களை விற்பனை செய்திட ஏதுவாக விற்பனைக்கான இணைய தளம் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். 

Tags:    

Similar News