தமிழ்நாடு

கணவரை கொன்ற மூதாட்டி தெய்வானை.

கணவரை உருட்டு கட்டையால் அடித்து கொன்ற மூதாட்டி- மதுபோதையில் வெறிச்செயல்

Published On 2023-09-10 05:25 GMT   |   Update On 2023-09-10 05:25 GMT
  • போதை தலைக்கேறிய நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
  • போலீசார் கொலை செய்யப்பட்ட லோகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை:

கோவை ராமநாதபுரம் அருகே உள்ள சிவராம் நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 75). இவரது மனைவி தெய்வானை (65). இவர்களுக்கு மணிகண்டன் என்ற ஒரு மகன் உள்ளார். அவர் திருமணமாகி செல்வபுரத்தில் வசித்து வருகிறார்.

தெய்வானை அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். மேலும் சில ஆடுகளை வைத்தும் மேய்த்து வருகிறார். லோகநாதன் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

கணவன்-மனைவி இருவரும் குடிப்பழக்கம் உள்ளவர்கள். அவர்கள் தினமும் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம். அதன்படி நேற்று மதியம் 3 மணி அளவில் இவர்கள் 2 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது லோகநாதன் அவரது மனைவியை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த தெய்வானை அங்கு இருந்த உருட்டுக்கட்டையால் லோகநாதனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து அங்கேயே உயிரிழந்தார்.

மதுபோதையில் இருந்த தெய்வானை, தனது கணவரை கொன்றுவிட்டதாக புலம்பியபடி இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் எட்டிப்பார்த்தனர். அங்கு லோகநாதன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னர். அப்போது தெய்வானை, தன்னை கணவர் தாக்கியதால் உருட்டு கட்டையால் அவரை அடித்து கொலை செய்ததாக தெரிவித்தார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் கொலை செய்யப்பட்ட லோகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி தெய்வானை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.

Tags:    

Similar News