தமிழ்நாடு

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்ததால் தக்காளி, வெங்காயம் விலை திடீர் உயர்வு

Published On 2023-06-01 08:59 GMT   |   Update On 2023-06-01 08:59 GMT
  • சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • பீன்ஸ், கத்தரிக்காய், அவரைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்து உள்ளது.

போரூர்:

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மாநிலம் புங்கனூர், வி-கோட்டா, பலமனேர், குப்பம், மதனப்பள்ளி மற்றும் கர்நாடகா மாநிலம் கோலார், ஒட்டுப்பள்ளி, சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.

தினசரி 55 முதல் 60 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.30-க்கு விற்கப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் வெங்காயத்தின் விலையும் சற்று அதிகரித்து உள்ளது. ரூ.15-க்கு விற்கப்பட்ட பெரியவெங்காயம் இன்று ரூ.20-க்கு விற்பனை ஆனது. வரும் நாட்களிலும் இதே விலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக பீன்ஸ், கத்தரிக்காய், அவரைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்து உள்ளது.

இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.80-க்கும், உஜாலா கத்தரிக்காய் ரூ.65-க்கும், வரி கத்தரிக்காய் ரூ.45-க்கும், அவரைக்காய் ரூ.60-க்கும் விற்பனை ஆனது.

தக்காளி விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறும்போது, கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து விட்டது. இதனால் தக்காளி விலை அதிகரித்து உள்ளது. நேற்று 40 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்த நிலையில் இன்று 50 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்து இருக்கிறது என்றார்.

Tags:    

Similar News