தமிழ்நாடு

பொதுத்தேர்வில் பிட் அடித்து வீடியோ பதிவிட்ட மாணவர்கள்- அதிகாரிகள் தீவிர விசாரணை

Published On 2024-04-05 07:24 GMT   |   Update On 2024-04-05 07:24 GMT
  • கண்காணித்து ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்தாலும் மாணவர்களின் சேட்டைகள் குறையவில்லை.
  • தேர்வு மைய அதிகாரிகள் மெத்தனமான இருந்தார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள சில அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர், பள்ளிக்கு புத்தகப்பையுடன் செல்வதை விட செல்போனுடன் செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவர்கள் வகுப்பறைகளில் அமர்ந்து 'ரீல்ஸ் வீடியோ' எடுத்து, அதை சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கமாக நடக்கிறது. இதனை கண்காணித்து ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்தாலும் மாணவர்களின் சேட்டைகள் குறையவில்லை. மேலும் சில ஆசிரியர்கள் பின்விளைவுகளை நினைத்து தங்கள் கடமையை செய்ய அச்சப்படுகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி எல்லையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள், மார்ச் 11 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடந்த கணக்குப்பதிவியல், பொருளியல் பாடங்களுக்கு 'பிட்' எடுத்துச் சென்று காப்பி அடித்தது தொடர்பாக, தங்கள் செல்போனில் ரீல்ஸ் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோ இதர சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. பள்ளிக்கு செல்போனுடன் வந்தவர்கள் இப்போது பொதுத்தேர்வு அறைக்கே செல்போனுடன் சென்றது தெளிவாகி இருக்கிறது.

தேர்வு மையத்துக்கு செல்போன் எப்படி வந்தது. தேர்வு மைய அதிகாரிகள் மெத்தனமான இருந்தார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News