தமிழ்நாடு

அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்த தி.மு.க.வினர் சதி: எஸ்.பி. வேலுமணி

Published On 2023-10-17 07:38 GMT   |   Update On 2023-10-17 07:38 GMT
  • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.கவின் தலைவர்.
  • எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையான கூட்டணி அமையும்.

கோவை:

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2½ ஆண்டு காலமாக ஆட்சி செய்து வரும் தி.மு.க அரசு கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் தரவில்லை. எந்தவொரு திட்டமும் புதிதாக வரவில்லை.

கோவையில் சாலைகள் தரமற்ற முறையில் போடப்படுகிறது. பல சாலைகள் போடப்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கோவையில் 500 சாலை திட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்தார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தால் தான் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் வரும்.

நான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என சிலர் பிரச்சனையை கிளப்பி வருகின்றனர். இந்த பிரச்சனையை கிளப்புபவர்கள் யார் என்று தெரியவில்லை. அது எங்கிருந்து வருகிறது எனவும் தெரியவில்லை.

தி.மு.க. ஐ.டி.விங் குழுவினர் ஏதாவது செய்து அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இது போன்ற கருத்துக்களை பரப்பி வருகின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.கவின் தலைவர்.

ஏக்நாத் ஷிண்டே என்பவர் அவரது கட்சிக்கு துரோகம் செய்துள்ளார். நான் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த அ.தி.மு.க தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி பின்னால் முழுமையாக நிற்கிறோம். நான் என்றைக்குமே அ.தி.மு.க காரன் தான். எனது குடும்பமே அ.தி.மு.க குடும்பம் தான். எனவே எந்தவித குழப்பம் செய்தாலும் இங்கு எதுவும் நடக்காது. நாங்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வீறுநடை போடுவோம்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையான கூட்டணி அமையும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க வெல்லும். அத்தனை மக்களும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என நினைக்கின்றனர்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி விட்டார். அதனை இவர்களால்தாங்க முடியவில்லை. அதனால் இப்படி குழப்பம் ஏற்படுத்த பார்க்கிறார்கள். இதுபோல் சில்மிஷம் செய்து எங்களை பிரிக்க நினைக்கிறார்கள். அது நடக்காது. அ.தி.மு.க.வில் இருந்து என்னை மட்டுமல்ல. யாரையும் பிரிக்க முடியாது.

எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News