தமிழ்நாடு

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியவர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும்- ராமதாஸ், என்.ஆர்.தனபாலன் அறிக்கை

Published On 2023-05-15 08:41 GMT   |   Update On 2023-05-15 08:41 GMT
  • கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணை போன காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்திருப்பது வெறும் கண்துடைப்பு வேலையாகும்.
  • தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருப்பவர்களை குண்டர் சட்டதில் கைது செய்யவேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தையடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இரு நிகழ்வுகளிலும் ஒரே வகையான கள்ளச்சாராயம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

கள்ளச்சாராய உயிரிழப்புகளைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்தி வரும் ஆய்வுகளில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, அவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய மதுவிலக்கு நடைமுறைப் பிரிவு கள்ளச்சாராயத்தை விற்பனை செய்பவர்களுக்கு ஆதரவாக செயல்படும் வரையிலும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது. கள்ளச்சாராயக் கட்டமைப்பை வேருடன் ஒழிக்க வேண்டும்.

கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறிய ஊராட்சித் தலைவர், கிராம நிர்வாக அதிகாரி, காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அருகே காரணைப் புதுச்சேரி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மதுக்கடையையும், அதன் குடிப்பகத்தையும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு சூறையாடியுள்ளனர்.

காரணைப் புதுச்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் சர்ச்சைக்குரிய மதுக்கடை மற்றும் குடிப்பகத்தை அரசு உடனடியாக மூட வேண்டும்; தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து கொள்கை முடிவு எடுத்து உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:-

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிர் இழந்த சம்பவம் துரதிஷ்டவசமானதாகும்.

கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணை போன காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்திருப்பது வெறும் கண்துடைப்பு வேலையாகும்.

தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருப்பவர்களை குண்டர் சட்டதில் கைது செய்யவேண்டும். போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள இளைஞர்களை மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News