அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை வருகை
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார்.
- தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழக மேலாண்மை இயக்குனர், மாவட்ட கலெக்டர், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.
கோவை:
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளல் பங்கேற்பதற்காக இன்று இரவு கோவை வருகிறார்.
கோவை விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க.வினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி ஆகியோர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து அவர் கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை காலை கோவை கொடிசியாவில் நடைபெறும் நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழாவில் பங்கேற்று, ஆணைகளை வழங்குகிறார்.
நான் முதல்வன் வழிகாட்டும் இணைய முகப்பு, நடப்பு கல்வி ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு, முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு திறன் பயிற்சி ஆகியவற்றையும் தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து அதே வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுததுறை சார்பில கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 228 கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர், சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை செயலாளர், தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழக மேலாண்மை இயக்குனர், மாவட்ட கலெக்டர், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.