தமிழ்நாடு செய்திகள்

சோலையார் அணையில் குட்டிகளுடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்த யானைகள்

Published On 2024-01-13 14:56 IST   |   Update On 2024-01-13 14:56:00 IST
  • வனவிலங்குகள் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உலா வருகிறது.
  • ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு கரும்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார வனபகுதியில் யானை, கரடி, புலி. சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும் அரிய வகை பறவைகளும் வசிக்கின்றன.

இந்த வனவிலங்குகள் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உலா வருகிறது.

தமிழக - கேரள எல்லை பகுதியான அதிரப்பள்ளி வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து குட்டிகளுடன் வந்த யானை கூட்டம் வால்பாறை பகுதியில் சுற்றித்திரிகிறது. இந்தநிலையில் அந்த யானைகள் வால்பாறை சோலையார் அணையில் குளித்து குதூகலம் அடைந்தன. அணையில் தற்போது தண்ணீர் குறைந்த அளவே இருப்பதால் யானை குட்டிகளும் குளிக்க ஏதுவாக இருந்தது. அந்த யானைகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தன.

தற்போது பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு கரும்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கரும்புகளை ரேஷன் கடைகளில் வைத்துள்ளனர். இதனால் யானைகள் ரேஷன் கடைகளை சேதப்படுத்தி கரும்புகளை ருசிக்க வர வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் வால்பாறை பகுதியில் உள்ள பொது மக்கள் கரும்புகளின் சக்கைகளை வீட்டிற்கு வெளியில் போட வேண்டாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News