தமிழ்நாடு

மோடி பேரணியில் மாணவர்கள் பங்கேற்றதாக மேலும் ஒரு பள்ளி மீதும் புகார்

Published On 2024-03-20 07:01 GMT   |   Update On 2024-03-20 07:17 GMT
  • பள்ளி சீருடையில் மாணவ-மாணவிகளும் நின்று மோடியை வரவேற்றனர்.
  • பள்ளி அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.

கோவை:

பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் கோவையில் ரோடு ஷோ மூலம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதில் ஏராளமான பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.

அவர்களுக்கு மத்தியில் பள்ளி சீருடையில் மாணவ-மாணவிகளும் நின்று மோடியை வரவேற்றனர். இதற்கு தி.மு.க., கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அதனையும் மீறி பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்கச் செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்திலும் புகார்கள் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார்பாடி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

விசாரணையில் பேரணியில் பங்கேற்றது சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் என்பது தெரியவந்தது. கோவை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி புனித அந்தோணியம்மாள் அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் விசாரணை அறிக்கையை அவர் கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.

இதற்கிடையே குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி அதிகாரிகள் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தனர். அதன்பேரில் தனியார் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களும் பிரதமர் மோடி நடை பயணத்தில் பங்கேற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்த பள்ளி மாணவர்கள், பள்ளி வேனிலேயே அழைத்துச் செல்லப்பட்டு பேரணியின் போது கலைநிகழ்ச்சி நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்கும் படி மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது. பள்ளி அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.

Tags:    

Similar News