தமிழ்நாடு செய்திகள்

விமானம் புறப்படுவதில் தாமதம்- விமான நிலையத்தில் பயணிகள் 'திடீர்' போராட்டம்

Published On 2023-11-24 14:07 IST   |   Update On 2023-11-24 14:07:00 IST
  • பயணிகள் விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ஆலந்தூர்:

சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று மாலை 6.25 மணியளவில் விமானம் புறப்படதயாராக இருந்தது. அதில் 154 பேர் பயணம் செய்ய இருந்தனர். அவர்கள் அனைவரும் மாலை 5 மணிக்கு முன்னதாகவே பாதுகாப்பு சோதனை அனைத்தையும் முடித்து விட்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.

ஆனால் எதிர் முனையில் வர வேண்டிய விமானம் தாமதமானதால் டெல்லி விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இரவு 8 மணி வரையில் விமானம் புறப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அவர்களை விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். பின்னர் இரவு 9.25 மற்றும் 10 மணியளவில் விமானம் புறப்படும் என்று அடுத்தடுத்து தெரிவித்தும் விமானம் புறப்படவில்லை.

இதேபோல் சென்னையில் இருந்து இரவு 7 மணிக்கு, அகமதாபாத் செல்ல வேண்டிய அதே நிறுவன மற்றொரு விமானமும் இரவு 10 மணி வரையில் புறப்படவில்லை. இதனால் அந்த விமானத்தில் பயணம்செய்ய இருந்த 162 பயணிகளும் டெல்லி பயணிகளுடன் சேர்ந்து போராட்டம் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் உள்நாட்டு விமான முனையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து 6.25 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய விமானம் 4 மணி நேரம் தாமதமாக, இரவு 10.35 மணிக்கும், இரவு 7 மணிக்கு அகமதாபாத் செல்ல வேண்டிய விமானம் இரவு 10.50 மணிக்கும் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Tags:    

Similar News