தமிழ்நாடு செய்திகள்

மாமனாரை துப்பாக்கியால் சுட்ட மருமகன்- போலீசார் வலைவீச்சு

Published On 2022-09-20 11:17 IST   |   Update On 2022-09-20 11:20:00 IST
  • கணவன்-மனைவி இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
  • நாகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் ராமச்சந்திரனை ஒரு அறையில் தள்ளி பூட்ட முயன்றனர்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 55), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ராக்கம்மாள் உள்பட 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராக்கம்மாளுக்கும், கோட்டையூர் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராமச்சந்திரன் (34) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது நாகப்பன் மகள் வீட்டுக்கு சென்று சமரசம் செய்து வைப்பது வழக்கம். ஆனாலும் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராக்கம்மாளுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். சம்பவத்தன்று ராமச்சந்திரன் மனைவியை பார்க்க மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது கணவன்-மனைவி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த நாகப்பன், மருமகனை சமரசம் செய்ய முயன்றார். அப்போது வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து நாகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் ராமச்சந்திரனை ஒரு அறையில் தள்ளி பூட்ட முயன்றனர். இதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் அந்த அறையில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து மாமனார் நாகப்பன் மீது சுட்டார். இதில் அவரது கழுத்துக்கு கீழ் குண்டு பாய்ந்தது.

படுகாயம் அடைந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் தேவகி வழக்குப்பதிவு செய்து மாமனாரை துப்பாக்கியால் சுட்ட ராமச்சந்திரனை தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் மாமனாரை மருமகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News