தார் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: கிராம மக்கள் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
- கலெக்டரின் உத்தரவின் பேரில் இப்பணி அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
- பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ளது ராஜபாளையம் கிராமம். இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார் தொழிற்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு ராஜபாளையம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொழிற்சாலையால் விலை நிலங்கள் பாதிப்பு, நிலத்தடி நீர்மட்டம், சுற்றுச் சூழல் பாதிப்பு. சுவாசக் கோளாறு உள்ளிட்ட ஏற்படும் பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறி மாவட்ட கலெக்டரில் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் இப்பணி அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் அப்பகுதியில் மீண்டும் தார்தொழிற்சாலை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் ராஜ பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தொழிற்சாலை அமைப்பதற்கான பணியைதடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் பெரியபாளைம் போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் தனபால் உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.