தமிழ்நாடு

பொங்கல் - விமான டிக்கெட் கட்டணங்கள் அதிரடி உயர்வு

Published On 2024-01-13 03:56 GMT   |   Update On 2024-01-13 05:47 GMT
  • சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கோவை, சேலம் விமானங்களில் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளது.
  • சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.3,367 இன்று ரூ.17,262 ஆக உயர்ந்துள்ளது.

ஆலந்தூர்:

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை, வரும் திங்கள்கிழமை 15ஆம் தேதியில் இருந்து, 17ஆம் தேதி புதன்கிழமை வரை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதோடு சனி, ஞாயிறு சேர்ந்து வருவதால், தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை உள்ளது.

இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள், இறுதி நேரத்தில் சொந்த ஊர் செல்ல, விமான பயணங்களை மேற்கொள்கின்றனர்.

இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கடந்த ஓரிரு நாட்களாகவே பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

இதை அடுத்து சென்னையில் இருந்து, இந்த நகரங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமானங்களில், டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு, உயர்ந்து உள்ளன. ஆனாலும் கட்டண உயர்வை குறித்து கவலைப்படாமல், பயணிகள் போட்டி போட்டுக்கொண்டு, கூடுதல் கட்டணங்கள் செலுத்தி, விமான பயணம் செய்கின்றனர்.

சென்னை, தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.3,624. இன்று கட்டணம் ரூ.13,639. சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.3,367. இன்று ரூ.17,262. சென்னை-திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,264. இன்று கட்டணம் ரூ.11,369.

சென்னை-கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,315. இன்று ரூ.14,689. சென்னை- சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,290. இன்று ரூ.11,329.

இதேபோல் பல மடங்கு கட்டண உயர்வு இருந்தாலும், பயணிகள் பலர் டிக்கெட் கிடைக்காமல், தவிக்கின்றனர்.

எனவே இதைப்போன்ற விழாக்காலங்களில், சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கப்படுவது போல், பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள நகரங்களுக்கு சிறப்பு விமானங்கள், இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.

Tags:    

Similar News