தமிழ்நாடு

நாங்கள் இல்லை என்றால் அதிமுக ஆட்சி எப்போதோ முடிந்திருக்கும்- அன்புமணி

Published On 2024-04-04 13:51 GMT   |   Update On 2024-04-04 13:51 GMT
  • நாங்கள் கூட்டணியில் தான் இருக்கிறோம், அதிமுக தான் கூட்டணியில் இருந்து விலகி உள்ளது.
  • சமூக நீதி எங்கள் உயிர் மூச்சு. சமூக நீதிக்காக போராடும் ஒரே தலைவர் ராமதாஸ்.

கிருஷ்ணகிரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

பாமக- பாஜகவுன் கூட்டணி சேர்வது புதிதல்ல. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் 6 ஆண்டுகள் பாமக கூட்டணியில் இருந்தது.

திமுகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதை முதலமைச்சர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றார்.

நாங்கள் கூட்டணியில் தான் இருக்கிறோம், அதிமுக தான் கூட்டணியில் இருந்து விலகி உள்ளது.

2014ம் ஆண்டு எனக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். எப்போதும் தர்மபுரி மக்களுக்கு உண்மையாக இருப்பேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.

நான் அப்போது கொண்டு வந்த திட்டங்கள் முழுமை அடையவில்லை. நிலுவையில் உள்ள திட்டங்களை சௌமியா அன்புமணி முடித்து வைப்பார்.

பிரச்சினையும், தீர்வும் நமக்கு நன்றாக தெரிகிறது. அதிகாரம் வந்தால் ஒரே நாளில் தர்மபுரியின் 90 சதவீத பிரச்சிவைகளையும் தீர்க்க முடியும்.

தர்மபுரி மக்களின் முன்னேற்றம் தான் எனக்கு முக்கிய வேலை. மேடைக்காக பேசவில்லை, உணர்வுப்பூர்வமாக பேசுகிறேன். திட்டங்கள் முழுமை அடையாததற்கு காரணம், முன்பு நீங்கள் தேர்வு செய்த எம்.பி.

பாமக நிறுவனர் ராமதாஸ் போராடியதால் தான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் வந்தது.

முதல்வர் ஸ்டாலினும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தர்மபுரிக்கு என்ன செய்தனர் ?

பாஜகவுடன் திமுக ஏன் முன்பு கூட்டணிக்கு சென்றது? பல முறை நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்துள்ளோம், புதிதாக சேரவில்லை.

சமூக நீதி எங்கள் உயிர் மூச்சு. சமூக நீதிக்காக போராடும் ஒரே தலைவர் ராமதாஸ். எந்த கூட்டணியில் இருந்தாலும் சமூக நீதியில் சமரசம் கிடையாது.

யார் பிரதமராக இருந்தாலும் சமூக நீதியை நாங்கள் விட்டு கொடுத்ததில்லை. அதிமுகவிற்கு, பாமக துரோகம் செய்யவில்லை.

உழைத்து உழைத்து, மாறி மாறி உங்களை நாங்கள் முதல்வராக்கி வருகிறோம். வன்னியர்களுக்கு மனதார இட ஒதுக்கீடு அளித்ததா அதிமுக ? கடுமையாக போராட்டம் நடத்தினோம். அப்போதும் இட ஒதுக்கீடு அளிக்கவில்லை.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் இட ஒதுக்கீட்டை அதிமுக அறிவித்தது. எனக்கு சீட்டு வேண்டாம். இட ஒதுக்கீடு கொடுத்தால் போதும் என்றார் ராமதாஸ்.

இட ஒதுக்கீட்டை வைத்து பேரம் பேசினார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமிக்கு சமூக நீதி பற்றி கவலை கிடையாது. அரைகுறையாக சட்டம் வந்ததால்தான் நீதிமன்றம் ரத்து செய்தது.

நாங்கள் இல்லை என்றால் அதிமுக ஆட்சி எப்போதோ முடிந்திருக்கும். நாங்கள் துரோகம் செய்யவில்லை, தியாகம் செய்தோம்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இட ஒதுக்கீடு பற்றி பேசினார்களா ? ஒரு அதிமுக எம்எல்ஏ-ஆவது பேசினாரா ?

பாமக துரோகம் செய்யவில்லை, துரோகம் செய்தது அதிமுக தான். என் மனதில் அவ்வளவு ஆதங்கம் இருக்கிறது.

காலம் முழுவதும் அதிமுகவுடன் இருப்போம் என ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொடுத்தோமா ? கருணாநிதி இருந்திருந்தால் இந்நேரம் கையெழுத்து போட்டிருப்பார்.

நமது நோக்கம் தர்மபுரியின் வளர்ச்சி.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News