தமிழ்நாடு செய்திகள்

ஆவடி ரெயில் நிலையத்தில் காத்துக் கிடக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள்

Published On 2024-10-16 01:15 IST   |   Update On 2024-10-16 01:15:00 IST
  • தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
  • சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை விட்டுவிட்டு பெய்து வருவததால், சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதற்கிடையில், சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் கனமழை காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லக் கூடிய பயணிகள் ரெயில் ரத்தாகி ஆவடியில் இருந்து புறப்படுகின்றன.


அதனை தொடர்ந்து, பயணிகள் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆவடி ரெயில் நிலையத்திற்கு வந்தனர். தற்போது அங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்துள்ளனர். குறிப்பாக, இரவு 9 மணிக்கு வர வேண்டிய ரெயிலானது 12 மணியை கடந்தும் வரவில்லை. இதனால் மழை மற்றும் குளிருக்கு நடுவே பயணிகள் மிகுந்த அவதியை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து பயணிகளிடம் கேட்டபோது, "நாங்கள் மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருக்கிறோம். கேட்டால், ரெயில் வருவது குறித்து அறிவிப்பு செய்யப்படும் என்கிறார்கள். இதுவரை அறிவிப்பு செய்யப்படவில்லை. ரெயில் வருமா என்றே தெரியவில்லை. ஒருவேளை ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டால் நள்ளிரவு நேரத்தில் நாங்கள் எப்படி வீட்டிற்கு செல்ல முடியும்? பெண்கள், குழந்தைகள் அவதியடைந்து வருகின்றனர். ரெயில்கள் குறித்த அறிவிப்பை தெளிவாக தெரிவிக்க வேண்டும்." என்றனர்.

Tags:    

Similar News