தமிழ்நாடு செய்திகள்

காதல் திருமணம் செய்த மைனர் பெண்: கணவருடன் ஏற்பட்ட தகராறால் 4 மாத குழந்தை கொலை?

Published On 2023-08-29 13:55 IST   |   Update On 2023-08-29 13:55:00 IST
  • அஜித்குமார் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜிடம் புகார் அளித்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டி அருகே உள்ள வேலாயுதபுரத்தைச் சேர்ந்த ரவி மகன் அஜித்குமார் (வயது 27). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.

இவர் நிலக்கோட்டை பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தியா என்ற பெண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்ததால் மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரிய வதந்து. இதனையடுத்து அஜித்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் கடந்த 2020ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

அதன் பின்னர் வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அஜித்குமார் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அஜித்குமார், அவரது மனைவியும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இதன் பின்னர் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது மனைவி வேலாயுதபுரத்தில் இருந்து கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் நிலக்கோட்டை அனைத்து போலீஸ் நிலையத்தில் சேர்த்து வைக்கும் படி அஜித்குமார் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனதாக அஜித்குமாருக்கு தகவல் வந்தது. இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அஜித்குமார் தனது மாமனார் வீட்டிற்கு சென்று பார்த்தார். குழந்தை எவ்வாறு இறந்தது என கேட்டபோது அதற்கு மருந்து கொடுத்ததாகவும், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும் கூறி உள்ளனர்.

ஆனால் அவர்களின் பேச்சில் சந்தேகம் அடைந்த அஜித்குமார் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜிடம் புகார் அளித்தார். அதில் எனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் என் மீது உள்ள வெறுப்பில் எனது குழந்தையை கொலை செய்திருக்கலாம். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News