தமிழ்நாடு செய்திகள்

குறுவை சாகுபடி பாதிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

Published On 2023-09-06 10:59 IST   |   Update On 2023-09-06 12:46:00 IST
  • தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து
  • டெல்டா மாவட்டங்களில் வேளாண்மைத்துறை ஆணையர் எல்.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் இன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை:

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் போதுமான தண்ணீர் வராத காரணத்தால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

கடைமடை வரை தேவையான தண்ணீர் சென்றடையாததால் குறுவை சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் வேளாண்மைத்துறை ஆணையர் எல்.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் இன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பதில் மறு விவசாயம் செய்யவும், சம்பா சாகுபடிக்கு தயாராகும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும் என்றும், உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தண்ணீரின்றி கருகிய குறுவை பயிர் சேதம் குறித்தும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்டா மாவட்ட ஆய்வுகளை தீவிரப்படுத்துவது குறித்தும், ஏக்கருக்கு வழங்க வேண்டிய நிவாரணத்தொகை குறித்தும் முக்கிய முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர், வேளாண்மைத்துறை செயலாளர், வேளாண்மைத்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Tags:    

Similar News