தேர்தலை தனித்து சந்திக்கும் துணிவு அ.தி.மு.க.-பா.ஜனதாவுக்கு கிடையாது: கே.எஸ்.அழகிரி
- அண்ணாமலையின் பயணத்துக்கு கூட்டம் கூடுவது பணத்தை கொடுத்து கூட்டுவதுதான். அதெல்லாம் ஓட்டாக மாறாது.
- இந்தியா கூட்டணியை பார்த்து மிரண்டு கிடக்கும் பா.ஜனதா என்னவெல்லாமோ வித்தை காட்டி பார்க்கிறது.
சென்னை:
அ.தி.மு.க.-பா.ஜனதாவுக்கு இடையே நடக்கும் கூட்டணி மோதல் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
எக்காரணத்தை கொண்டும் இரு கட்சிகளும் பிரியாது. காரணம் அதற்கான துணிச்சல் இப்போதைய அ.தி.மு.க.வினரிடம் கிடையாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அந்த துணிச்சல் இருந்தது.
இப்போது மத்திய பா.ஜனதாவின் கிடுக்கு பிடியில் சிக்கி கிடக்கிறார்கள். இப்போது கோபத்தின் காரணமாகவும், இயலாமையின் வெளிப்பாடாகவும் தான் பேசுகிறார்கள்.
இப்போது குமுறி குமுறி பேசினாலும் கடைசியில் ஒரே மேடையில்தான் குழுமி இருப்பார்கள்.
அண்ணாமலையின் பயணத்துக்கு கூட்டம் கூடுவது பணத்தை கொடுத்து கூட்டுவதுதான். அதெல்லாம் ஓட்டாக மாறாது.
பா.ஜனதாவின் பலம் என்ன என்பதை கடந்த தேர்தலிலேயே பார்த்து விட்டோம். இப்போதைய தலைவரும், அப்போதைய தலைவரும் தோற்றார்கள். 23 தொகுதிகளில் போட்டி யிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றார்கள்.
தமிழகத்தில் அ.தி.மு.க.வின் காலடியில் இருக்கும் பா.ஜனதா, அ.தி.மு.க. மிரளுகிறதா என்று பார்ப்போம் என்று மிரட்டிப் பார்க்கிறது அவ்வளவுதான்.
இந்தியா கூட்டணியை பார்த்து மிரண்டு கிடக்கும் பா.ஜனதா என்னவெல்லாமோ வித்தை காட்டி பார்க்கிறது. ஆனால் எந்த வித்தையும் மக்களிடம் எடுபடாது.
இவ்வாறு அவர் கூறினார்.