தமிழ்நாடு

நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கடிதம் எழுதிய ஐ.ஆர்.எஸ். அதிகாரி வட சென்னையில் போட்டி

Published On 2024-03-26 10:23 GMT   |   Update On 2024-03-26 10:23 GMT
  • வடசென்னை தொகுதியில், திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவும் போட்டியிடுகின்றனர்
  • அமலாக்கத்துறையை பாஜகவின் ஏவல் துறையாக மாற்றிவிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வட சென்னை தொகுதியில் ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகன் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

வடசென்னை தொகுதியில், திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவும் போட்டியிடுகின்றனர்.

கடந்த வருடம் சேலத்தை சேர்ந்த 2 விவசாயிகளை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அந்த விவசாயிகளுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகனின் மனைவி பிரவீனா ஆஜரானார். பின்பு இந்த வழக்கு விவகாரம் பெரிதாகிவிட, விவசாயிகள் மீது பதிந்த வழக்கை அமலாக்கத்துறை முடித்து வைத்தது.

இந்த விவகாரத்தை மேற்கோள்காட்டி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு பாலமுருகன் கடிதம் எழுதினார். அதில், அமலாக்கத்துறையை பாஜகவின் ஏவல் துறையாக மாற்றிவிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி, இந்தாண்டு ஜனவரி 22-ம் தேதி மத்திய அரசு அலுவலகங்களுக்கெல்லாம் அரைநாள் விடுமுறை அறிவித்தது மத்திய அரசு. ஆனால், பாலமுருகன் மட்டும் விடுமுறை ஏதும் எடுக்காமல் அன்று முழுவதும் அலுவலகத்தில் பணிபுரிந்தார். எனக்கு விடுமுறை வேண்டாம். என் அலுவலகம் வழக்கம்போல செயல்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் மத்திய வருவாய்த்துறைச் செயலாளருக்கும் அவர் கடிதமும் எழுதினார்.

இதனையடுத்து அவர், பணி ஓய்வுக்கு இரண்டு நாள்கள் முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News