தமிழ்நாடு

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 2 பெண் சிசுக்கள்- நாய்கள் கடித்து குதறிய கொடூரம்

Published On 2023-07-30 04:09 GMT   |   Update On 2023-07-30 04:09 GMT
  • உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • போலீசார் சிசுக்களை இங்கு வீசி சென்றவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே உள்ள குப்பைத் தொட்டியை நாய்கள் சுற்றி வந்தபடி இருந்தன. இன்று காலை இவ்வழியாக சென்ற பொதுமக்கள் நாய்களை விரட்டி குப்பைத் தொட்டியை பார்த்தபோது 2 பெண் சிசுக்கள் கிடந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விஷயம் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் குப்பைத் தொட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடினர்.

இது குறித்து நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பெண் சிசு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குப்பைத் தொட்டி அருகே கிடந்ததால் சிசுக்களை நாய்கள் கடித்து குதறியுள்ளன. இதில் ஒரு சிசுவின் தலையை காணவில்லை. போலீசார் சிசுக்களை இங்கு வீசி சென்றவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் உள்ளதா? அதில் சிசுவை வீசிச் சென்றவர்கள் உருவம் பதிவாகியுள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். 2 பெண் சிசுக்களை வீசிச் சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை தேடி வருகின்றனர்.

முறையற்ற உறவில் பிறந்த குழந்தைகளா அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? என விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News