தமிழ்நாடு

நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்- நடத்தை சந்தேகத்தில் வெறிச்செயல்

Published On 2023-07-17 05:17 GMT   |   Update On 2023-07-17 05:17 GMT
  • பிரபாகரன் மனைவியிடம் வேலைக்கு செல்லக்கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டு வெளியில் சென்றிருந்தார்.
  • சூரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கடம்பாகுடி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் பிரபாகரன் (வயது 41). இவருக்கும் சிங்கம்புணரியை சேர்ந்த சூரியா (30) என்பவருக்கும் திருமணமாகி, இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.

திருமணத்திற்கு பிறகு பிரபாகரன், சூரியா ஆகிய இருவரும் தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலை காசிலிங்கம் நகர் பகுதியில் தனிக்குடித்தனம் வசித்து வந்தனர். சூரியா புதுக்கோட்டை பகுதியில் அழகு நிலையம் உடல் தகுதிக்கான பிட்னஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையே சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த பிரபாகரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. அதற்கேற்றவாறு சூரியாவுக்கு இரவு நேரங்களிலும் தொடர்ந்து செல்போனில் அழைப்பு வந்துகொண்டே இருந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் மனைவியை கண்டித்தார். அத்துடன் நான் அதிக அளவில் பணம் சம்பாதிக்கும்போது நீ வேலைக்கு செல்வதை நிறுத்திக்கொள் என்றும் கூறியுள்ளார். ஆனால் சூரியா அதனை கண்டுகொள்ளவில்லை. வழக்கம் போல் புதுக்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வந்தார். எனவே அடிக்கடி கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை தூங்கி எழுந்த பிரபாகரன் மனைவியிடம் வேலைக்கு செல்லக்கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டு வெளியில் சென்றிருந்தார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது எதிரே தேவகோட்டை தர்ம முனீஸ்வரர் கோவில் அருகே சூரியா இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

இதையடுத்து ஆத்திரத்தின் உச்சிச்கே சென்ற பிரபாகரன், தனது இருசக்கர வாகனத்தால் மனைவியின் வாகனத்தின் மீது வேகமாக மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சூரியாவை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நடுரோட்டில் சரமாரியாக கழுத்தில் வெட் டினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே சூரியா பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் ஆகியோர் விரைந்து சென்று கொலையுண்ட சூரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கொலை சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் மனைவியை கொலை செய்த பிரபாகரன் தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நடத்தை மீதான சந்தேகத்தில் நடுரோட்டில் மனைவியை கணவர் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News