தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து

Published On 2022-09-30 05:45 GMT   |   Update On 2022-09-30 06:20 GMT
  • முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி மிரட்டி நிலத்தை அபகரித்ததாக வழக்கு
  • 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

சென்னை:

சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித் திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது மருமகனின் சகோதரர் மகேஷ் அளித்த பொய் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், 2016-ம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு 2021-ம் ஆண்டு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2016-ம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் புகார் அளிக்க இயலவில்லை என்று புகார்தாரர் மகேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தள்ளிவைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி இளந்திரையன், ஜெயக்குமாருக்கு எதிராக மத்திய குற்றப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அவரது மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீதான நில அபகரிப்பு வழக்குகளையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News