தமிழ்நாடு செய்திகள்

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேச்சு: அண்ணாமலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Published On 2024-02-14 08:28 IST   |   Update On 2024-02-14 09:42:00 IST
  • தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷினரிதான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது எனக் குறிப்பிட்டிருந்தார்.
  • அண்ணாமலையின் பேச்சு இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக நீதிமன்றத்தில் புகார்.

இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய வழக்கில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், சேலம் நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு மனுவை விசாரிக்கலாம் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாமலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

முன்னதாக,

கடந்த 2022-ம் ஆண்டு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷினரிதான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

அண்ணாமலையின் பேச்சு இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியுஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பாக நேரில் ஆஜராக நீதிமன்றம் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு எதிராகவும், தனது மீதான புகாரை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியும் அண்ணாமலை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தனது பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும், சேலம் நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு மனுவை விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News