மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை - ஆளுநர் அறிக்கை
- தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் பங்களிப்பு போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை விளக்க முயன்றேன்
- காந்தியை நான் அவமதித்துவிட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்-ன் 127 ஆவது பிறந்த நாள் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. நேதாஜி உருவாக்கிய இந்திய தேதிய ராணுவம் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட்டதால் தான் ஆங்கிலேயர்கள் நாட்டிற்கு விடுதலை அளித்ததாக கூறினார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு வி்ளக்கம் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, "நான் சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவில் பேசியதை ஊடகங்கள் திரித்து செய்தியாக்கி விட்டன. நான் காந்தியை அவமதிக்கவில்லை. அவருடைய போதனைகள் என்னுடைய வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருந்தன. காந்தியை நான் அவமதித்துவிட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை.
தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் பங்களிப்பு போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை விளக்க முயன்றேன். ஆங்கிலேயருக்கு எதிரான நேதாஜியின் படைகள் நமது விமானப்படை மற்றும் கப்பல் படைக்கு முக்கியதுவம் அளித்தன. இதுமட்டும் இல்லாமல் நேதாஜியின் பங்களிப்பு இல்லை என்றால் நமக்கு சுதந்திரம் கிடைக்க இன்னும் கூடுதல் ஆண்டுகள் ஆகியிருக்கலாம் " என தெரிவித்துள்ளார்