விதவை பெண்களை குறிவைத்து கைவரிசை: 3 பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி நகை, பணம் பறித்த வாலிபர்
- ஆன்லைனில் உள்ள திருமண வெப்சைட் தளத்தில் தனது பெயர் மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை பதிவு செய்திருந்தார்.
- ஏற்கனவே திருமண ஆசைகாட்டி பெண்ணை ஏமாற்றிய புகாரில் பீளமேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்தார்.
வடவள்ளி:
கோவை பேரூர் சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது42). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ரவிச்சந்திரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து கணவன், மனைவி 2 பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். ரவிச்சந்திரன் மட்டும் அந்த பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
ரவிச்சந்திரன் தனது மனைவி பிரிந்து சென்றதால் 2-வது திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். இதற்காக அவர் ஆன்லைனில் உள்ள திருமண வெப்சைட் தளத்தில் தனது பெயர் மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை பதிவு செய்திருந்தார்.
மேலும் அதில் மாப்பிள்ளை தேவை என யாராவது பதிவிட்டுள்ளார்களா என்றும் பார்த்தார். அப்போது நாமக்கல் திருச்செங்கோட்டை சேர்ந்த விதவை பெண் ஒருவர் வரன் தேடி பதிவிட்டிருந்ததை ரவிச்சந்திரன் பார்த்தார்.
பின்னர் அதில் உள்ள செல்போன் எண்ணை எடுத்து, போனில் அவரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தனது பெயர் ரவிச்சந்திரன் என்றும், மொத்த வியாபாரம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு சொந்தமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளதாகவும், சென்னையில் 60 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, பெங்களூருவில் பங்களா இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
தான் விவகாரத்து பெற்று விட்டதால் தன்னுடன் யாரும் இல்லை. நான் மட்டுமே தனியாக இருப்பதாகவும், உங்கள் விவரத்தை பார்த்து தொடர்பு கொண்டேன் என தெரிவித்தார்.
மேலும் உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அந்த பெண்ணிடம் தெரிவித்தார். அவர் கூறிய அனைத்தும் உண்மை என நம்பிய பெண், திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்துவிட்டார்.
தொடர்ந்து 2 பேரும் செல்போனில் பேசி வந்தனர். ஒருநாள் பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய ரவிச்சந்திரன், தனக்கு திருமண தடை தோஷம் இருப்பதாகவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டி இருப்பதால் உங்களால் முடிந்த உதவி செய்ய முடியுமா? என கேட்டார்.
அந்த பெண்ணும், அவர் கூறியதை நம்பி, ரூ.80 லட்சம் ரொக்க பணம், ரூ.80 லட்சம் மதிப்பிலான 167 பவுன் நகையையும் கொடுத்தார். நகை, பணத்தை வாங்கிய பிறகு பெண் ரவிச்சந்திரனை தொடர்பு கொள்ள முயன்றார்.
ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் இதுகுறித்து பேரூர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வந்தனர். அவரது செல்போனை வைத்து தேடியதில் கரூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவரவே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அங்கு பதுங்கியிருந்த ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். அப்போது அவருடன் பெண் ஒருவரும் இருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
ரவிச்சந்திரன், தனது மனைவி பிரிந்து சென்ற பின்னர் தனியாக வசித்துள்ளார். அப்போது 2-வது திருமணத்திற்காக பெண் தேடிய அவர், நாமக்கல்லை சேர்ந்த பெண்ணிடம் நைசாக பேசி பணத்தை பறித்து சென்றார்.
பின்னர் நேராக கரூர் பகுதிக்கு சென்ற ரவிச்சந்திரன், அந்த பகுதியில் பல் டாக்டராக இருந்து வரும் விதவை பெண்ணுடன், ஆன்லைன் வாயிலாக தொடர்பை ஏற்படுத்தி கொண்டு, அவருடனும் பேசி வந்தார்.
அவரிடமும் நாம் 2 பேரும் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார்.
டாக்டரும் நம்பவே 2 பேரும் கணவன், மனைவி போல ஒன்றாக வாழ தொடங்கி உள்ளனர். வீட்டில் இருந்தால் கண்டு பிடித்து விடுவார்கள் என நினைத்த ரவிச்சந்திரன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கும் விடுதிகள், லாட்ஜ்களிலேயே தங்கி இருந்ததும் தெரியவந்தது.
மேலும், பல் டாக்டரிடம் இருந்து பணம் பெற்று 2 சொகுசு கார்களையும் வாங்கியதும், அவரிடம் இருந்து பெற்ற பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது.
இதேபோல் அவர் பீளமேடு, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் தனது கைவரிசையை காட்டியுள்ளது போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் ரவிச்சந்திரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து இவர் இதுபோன்று வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளரா? என்பதை அறிய ரவிச்சந்திரனை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை போலீசார் தொடங்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரனிடம் இருந்து 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான ரவிச்சந்திரன், ஏற்கனவே திருமண ஆசைகாட்டி பெண்ணை ஏமாற்றிய புகாரில் பீளமேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்தார். தற்போது மீண்டும் திருமண ஆசை காட்டி பெண்களை ஏமாற்றி பணம் பறித்து சிக்கி உள்ளார்.