கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து- நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- வெடி விபத்தில் காயமடைந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் பட்டாசு குடோன் வெடித்தது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வெடிவிபத்தால் குடோன் அருகில் இருந்த ஓட்டல் உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இந்த வெடி விபத்தில் காயமடைந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.
உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவியும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவியும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிதியுதவியும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.