எழும்பூர் அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரியில் உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டுமான பணி விரைவில் தொடக்கம்
- வள்ளுவர் கோட்டத்தை மறுசீரமைக்கும் பணி ரூ.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
- 1,469 பணிகள் ரூ.980.31 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
சென்னை:
தமிழக சட்டசபையில் வைக்கப்பட்ட பொதுப்பணித்துறை கொள்கை விளக்க குறிப்பு புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:-
சிறப்பு திட்டங்கள் கீழ் சென்னை நந்தனத்தில் உள்ள எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் நவீன வசதிகளுடன் ரூ.44.50 கோடி செலவில் தரைத்தளம் மற்றும் 10 தளங்களில் 121 அறைகளுடன் 484 மாணவர்கள் தங்கும் வகையில் புதிய மாணவர் விடுதி கட்டிடம் கட்டும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. வள்ளுவர் கோட்டத்தை மறுசீரமைக்கும் பணி ரூ.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டிடம் அமைக்கும் பணி ரூ.53 கோடி மதிப்பீட்டில் விரைவில் தொடங்கப்பட உள்ளன. பள்ளி கல்வித்துறையில் மேல்நிலை மற்றும் உயர் நிலைப்பள்ளிகளில் மொத்தம் ரூ.1,644.89 கோடி மதிப்பீட்டிலான 3,864 கட்டுமான பணிகளில் ரூ.362.31 கோடி மதிப்பீட்டிலான 1,032 பணிகள் முடிவடைந்துள்ளன. 1,469 பணிகள் ரூ.980.31 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. ரூ.302.27 கோடி மதிப்பீட்டில் 1,363 பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.