தமிழ்நாடு செய்திகள்

நீதிக்கும், தர்மத்திற்கும், உண்மைக்கும் கிடைத்த தீர்ப்பு- எடப்பாடி பழனிசாமி

Published On 2023-08-25 12:39 IST   |   Update On 2023-08-25 14:54:00 IST
  • அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அ.தி.மு.க. பலமாக உள்ளது.
  • ஒரு குற்றவாளியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டுநராக இருந்தார் என்று கூறுவது தவறு.

எடப்பாடி:

அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பினால் நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது. அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அ.தி.மு.க. பலமாக உள்ளது.

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். தேசியளவில் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் கூட்டணி இருக்கும். இந்த கூட்டணி மகத்தான வெற்றிபெறும்.

அ.தி.மு.க தீர்ப்பு நீதிக்கும், தர்மத்திற்கும்,உண்மைக்கும் கிடைத்த தீர்ப்பு. எங்களிடம் நியாயம் இருந்தது. அதனால் தீர்ப்பு கிடைத்துள்ளது.

கொடநாடு வழக்கில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவது தவறான விஷயம்.

ஒரு ஆட்சி இருக்கும்போது பல்வேறு சம்பவங்கள் நடைபெறும். அந்த சம்பவத்தை சட்டரீதியாக அரசு அணுகி நடவடிக்கை எடுத்துள்ளது. வேண்டுமென்றே இன்றைய ஆட்சியாளர்கள் திரித்து அவர்களுக்கு சாதகமாக சூழ்ச்சி செய்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அ.தி.மு.க. சட்டத்தின் ஆட்சி நடத்தியது. அதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

தனபால் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர், இதே இன்றைய ஆட்சியாளர்களே விசாரணைக்கு அழைத்து சென்று 3 மாதங்கள் சிறையில் அடைத்தனர். நில அபகரிப்பில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்தவர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் என்று கனகராஜை இனி யாரும் சொல்லக்கூடாது. அவர் சசிகலாவின் ஓட்டுநராக இருந்தவர், மீறி ஜெயலலிதாவின் ஓட்டுநர் என கூறினால் நீதிமன்றத்தின் வழியாக வழக்கு தொடர்வோம், கனகராஜ் ஒருநாள் கூட ஓட்டுனராக கனகராஜ் இருந்தவர் இல்லை.

ஒரு குற்றவாளியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டுநராக இருந்தார் என்று கூறுவது தவறு.

கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் சட்டரீதியாக நடைபெற்று வருகிறது. அதைப்பற்றி பேசுவதே தவறு, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பவர்கள் மீது பேசுவது வழக்கிற்கு குந்தகம் விளைவித்து விடும்.

பாராளுமன்ற தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கிறது. தேர்தலுக்கான அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறோம். மதுரையில் எழுச்சி மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது. தென்மாவட்டத்தில் நடத்த முடியாது என்று கூறினார்கள். ஆனால் 15 லட்சம்பேர் கலந்துகொண்டு தமிழக வரலாற்றில் எந்த ஒரு கட்சிக்கும் தொண்டர்கள், நிர்வாகிகள், மக்கள் கலந்து கொண்டது இல்லை. அந்த அளவிற்கு வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டை நடத்தி காட்டியுள்ளோம்.

இனியாரும் அ.தி.மு.க. இரண்டாக, மூன்றாக சென்றுவிட்டது என்று கூறவேண்டாம். ஒன்றாக இருக்கிறது என்று மாநாட்டின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளோம்.

நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்டவைகள் மூலமாக தீர்ப்பு பெற்றுவிட்டோம். அ.தி.மு.க. எங்கள் தரப்பில் இருக்கிறது என்பது முழுமையாக உறுதிப்படுத்தி உள்ளோம்.

சந்திராயன்-3 தரை இறங்கியது நாட்டிற்கு கிடைத்த வெற்றி. தமிழக விஞ்ஞானிகள் மற்ற நாட்டை சேர்ந்தவர்களுக்கு சலித்தவர்கள் அல்ல என்று நிரூபணம் ஆகி உள்ளது. இந்திய வல்லரசு நாடாக உயர்வதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் முன்னே நின்று நிகழ்வை நிகழ்த்தியுள்ளார். அ.தி.மு.க சார்பாக அவருக்கு பாராட்டு தெரிவித்து விட்டோம். தமிழகத்தை சேர்ந்தவர் ஒருவர் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். இது இந்தியாவிற்கு கிடைத்த பெருமை.

ஒரு சிலரை தவிர்த்து அ.தி.மு.க.விற்காக உழைத்தவர்கள் பிரிந்து சென்றிருந்தால் கட்சிக்குக்குள் வர நினைத்தால் இணைத்துக் கொள்வோம். சிலர் கட்சியின் ரீதியாக வளர்ந்து அதிகாரத்திற்கு வந்து எப்படி இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். அப்படி வளர்ந்தவர்கள் கட்சிக்கு துரோகம் விளைவித்துள்ளனர். இன்றைய ஆளும் கட்சியுடன் சேர்ந்து அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் எட்டப்பராக செயல்பட்டவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை.

அ.தி.மு.க தொண்டர்கள் நிறைந்த கட்சி தொண்டராக நின்று தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அதிமுக வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறும். இதில் எந்த மாற்றமும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News