தமிழ்நாடு

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 10 இடங்களில் அதிரடி சோதனை: அமலாக்கத்துறை மீண்டும் அதிரடி

Published On 2023-09-12 03:35 GMT   |   Update On 2023-09-12 10:37 GMT
  • அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் இந்த 3 இடங்களிலும் காலை 8 மணியளவில் இருந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
  • திண்டுக்கல்லில் காண்டிராக்டர் ரத்தினம் உள்பட 3 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினர்.

சென்னை:

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையினர் கைது செய்ததும் நெஞ்சு வலிப்பதாக கூறிய செந்தில் பாலாஜியை அம்பாள்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதன்பின்னர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினர். அப்போது சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்களை திரட்டினர்.

இதுதொடர்பாக செந்தில் பாலாஜி வாக்குமூலமும் அளித்துள்ளார். செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் ஆகப்போகும் நிலையில் தற்போதுதான் அவர் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதை ஏற்று வெள்ளிக்கிழமைக்குள் பதில் அளிக்க அமலாக்கத் துறையினர் முடிவு செய்து உள்ளனர். செந்தில் பாலாஜி கைதான பிறகும் அமலாக்கத்துறையினர் தொடர்ச்சியாக அவர் தொடர்புடைய இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் செந்தில்பாலாஜி தொடர்புடைய 10 இடங்களில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அண்ணாநகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ், முகப்பேரில் உள்ள என்ஜினீயர் திலகம், நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் போக்குவரத்துத்துறை மேலாளர் ஜெகன் நாதன் உள்ளிட்டோரின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. குவாரிகளில் மணல் எடுப்பது தொடர்பாக சட்டவிரோதமாக பணபரிமாற்றம் நடந்திருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் இந்த 3 இடங்களிலும் காலை 8 மணியளவில் இருந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் நுங்கம்பாக்கம் பகுதியில் செல்போனில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து வைத்திருந்த அதிகாரிகள் அந்த புகைப்படத்தை காட்டி வீடு, வீடாக விசாரணை நடத்தினர். அந்த நபர் நுங்கம்பாக்கம் பகுதியில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அமலாக்கத் துறையினர் தகவல்களை திரட்டினர். அப்பகுதியில் உள்ள ஜூஸ் கடை, டீ கடை உள்ளிட்ட இடங்களிலும் போட்டோவை காட்டி விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோன்று திண்டுக்கல்லில் காண்டிராக்டர் ரத்தினம் உள்பட 3 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினர். திருச்சி, புதுக்கோட்டை, வேலூர், நாமக்கல் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில் அவரது நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளிலும் மணல் குவாரிகளை குறி வைத்தும் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News