ராகுல்காந்தியை சந்தித்தபோது விருதுநகர் பாராளுமன்ற தொகுதியை கேட்டேனா?- துரை வைகோ பேட்டி
- 56 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், சமூகத்துக்காகவும், தமிழர் நலன், தமிழக மக்களுக்காக எடுத்த முயற்சிகளில் வைகோ, 80 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளார்.
- மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால், மின் கட்டணத்தை உயர்த்தும் நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டது.
ஈரோடு:
மாமனிதன் வைகோ ஆவணப்பட வெளியீடு நிகழ்ச்சிக்கு பின்னர் நேற்று ஈரோட்டில் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
56 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், சமூகத்துக்காகவும், தமிழர் நலன், தமிழக மக்களுக்காக எடுத்த முயற்சிகளில் வைகோ, 80 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளார். தெலுங்கானாவில் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடர்ந்தபோது நானும் அவருடன் பங்கேற்றேன். அப்போது நாங்கள் வலதுசாரி அரசியலால் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் ஏற்பட்டு இருக்கும் சிக்கல்கள் குறித்து பேசினோம். தமிழகம் உள்பட இந்தியாவில் வலதுசாரிகளால் ஏற்படும் தாக்கம், பாதிப்புகள் குறித்து பேசினோம்.
ஆனால் நான் விருதுநகர் தொகுதியை எனக்கு ஒதுக்கித்தர வேண்டும் என்று பேசுவதற்காக சென்றதாக நாளிதழ் ஒன்று (தினத்தந்தி அல்ல) செய்தி வெளியிட்டது. அது தவறு. நான் எந்த தொகுதியை பெறுவது பற்றியும் அவருடன் பேசவில்லை.
விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியதால் ஏற்படும் இழப்பை சமாளிக்க, ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற வணிக பால் பாக்கெட்டுகளின் விலையை மட்டும்தான் அரசு உயர்த்தி இருக்கிறது. மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால், மின் கட்டணத்தை உயர்த்தும் நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டது.
இவ்வாறு ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ கூறினார்.