தமிழ்நாடு

தொடர் விடுமுறை: தமிழகம் முழுவதும் 580 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2024-01-24 03:45 GMT   |   Update On 2024-01-24 03:45 GMT
  • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
  • சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை:

தைப்பூச விழா (நாளை), குடியரசு தினம் (நாளை மறுதினம்), 27-ந் தேதி (சனிக்கிழமை), 28 (ஞாயிற்றுக்கிழமை) என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதையொட்டி சென்னையில் படிப்பு, பணி நிமித்தமாக தங்கி உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். எனவே தென்மாவட்ட ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது.

காத்திருப்போர் பட்டியல் நீண்டுள்ளது. 'தட்கல்', பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளை பயணிகள் எதிர்நோக்கி உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தைப்பூசம், குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை தொடர் விடுமுறை நாட்கள் வருவதால், இன்றும், நாளையும் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை தினசரி இயக்க கூடிய பஸ்களுடன் கூடுதலாக 405 சிறப்பு பஸ்களும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து அதாவது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 175 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 580 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று 5 ஆயிரத்து 722 பயணிகளும், நாளை 7 ஆயிரத்து 222 பயணிகளும் சென்னையில் இருந்து பயணம் மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அன்று 15 ஆயிரத்து 669 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

இந்த சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News