தமிழ்நாடு

திருமண வீட்டில் உறவினர்கள் மோதல்- மணப்பெண் மயக்கம்

Published On 2023-06-08 10:02 GMT   |   Update On 2023-06-08 10:02 GMT
  • வரவேற்பு நிகழ்ச்சியின்போது மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் மாறி மாறி நடனம் ஆடினார்கள்.
  • மோதலில் திருமண மண்டபத்தின் இருக்கைகள் உடைக்கப்பட்டதுடன் மண்டபத்தின் கண்ணாடிகளும் உடைத்து சூறையாடப்பட்டது.

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை நாகர்கோவில் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், புறநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நேற்று இரவு அதே மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் மணமகன் வீட்டார் மற்றும் மணமகள் வீட்டார் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சியின்போது மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் மாறி மாறி நடனம் ஆடினார்கள்.

அப்போது இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி மோதிக்கொண்டதால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது ஏற்பட்ட மோதலில் திருமண மண்டபத்தின் இருக்கைகள் உடைக்கப்பட்டதுடன் மண்டபத்தின் கண்ணாடிகளும் உடைத்து சூறையாடப்பட்டது.

இதை பார்த்த மணப்பெண் மயங்கி விழுந்தார். உறவினர்கள் மணப்பெண்ணை சமாதானம் செய்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இரு தரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்ய முயன்றனர்.

ஆனால் அவர்கள் சமாதானம் அடையவில்லை. நீண்ட நேரத்துக்கு பிறகு போலீசார் சமரசம் செய்தவுடன் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News