தமிழ்நாடு

பா.ஜ.க., அ.தி.மு.க. அமைத்திருப்பது கள்ளக்கூட்டணி- முத்தரசன் சாடல்

Published On 2024-03-28 09:37 GMT   |   Update On 2024-03-28 09:37 GMT
  • பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் அவர்கள் கேட்கிற சின்னங்கள் வழங்கப்படுகிறது.
  • தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கடமைப்பட்டு உள்ளோம்.

பெரம்பலூர்:

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். பெரம்பலூரில் அவர் பேசியதாவது:-

தி.மு.க. அணி என்பது ஒரு மகத்தான அணி. கொள்கைகான அணி. கொள்கைக்காக போராடிக் கொண்டிருக்கிற அணி. தமிழக முதல்-அமைச்சர் தனது பிரசாரத்தை பெரம்பலூர், திருச்சி தொகுதியில் தொடங்கி தற்போது தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.

நடைபெற இருக்கின்ற தேர்தல் ஒரு சாதாரண தேர்தல் அல்ல. நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வியுடன் இந்த தேர்தல் நடக்க இருக்கிறது. முற்றிலுமாக ஜனநாயகம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பானை சின்னம் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல ம.தி.மு.க.விற்கான பம்பர சின்னம் கொடுக்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. நம்மை எதிர்க்கும் நாம் தமிழர் கட்சிக்கான சின்னம் கூட பறிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் அவர்கள் கேட்கிற சின்னங்கள் வழங்கப்படுகிறது. ஒரு நடுநிலையோடு, நேர்மையாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையமே, இன்றைக்கு கேள்விக் குறியாக இருக்கிறது.

தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆகவே நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றவும், மதச்சார் பின்மை என்கிற மகத்தான கொள்கையை காப்பாற்றவும், நாம் இந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கடமைப்பட்டு உள்ளோம்.

அதேபோல மத்தியில ஆளும் மோடி தலைமையிலான அரசு என்பது ஒரு மாற்றான் தாய் மனப்போக்கோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது, தமிழ் மக்களை புறக்கணிக்கிறது. தமிழை புறக்கணிக்கிறது. அதே நேரத்தில் உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சலுகைகள் வாரி வழங்கப்படுகிறது.

நம்முடைய நிதி அமைச்சர் சட்டப்பேரவையில் குறிப்பிட்டது போல, நாம் செலுத்துகிற ஒவ்வொரு ரூபாய்க்கும், மத்திய அரசு திருப்பிக் கொடுப்பது வெறும் 29 பைசா தான். அதே நேரத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் இரண்டு ரூபாய் வழங்கப்படு கிறது. அதாவது இரு மடங்காக வழங்கப்படுகிறது நமக்கு குறைத்து வழங்கப்படு கிறது. எனவே பா.ஜ.க.வை நிராகரிக்க வேண்டும்.

எதிர் தரப்பில் அமைந்தி ருக்கிற கூட்டணியில், ஒன்று நள்ளிரவு கூட்டணி. மற்றொன்று கள்ளக் கூட்டணி என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண் டும். எனவே ஜனநாயக முறையில் இயங்கிக் கொண்டிருக்கிற தி.மு.க. தலைமையிலான இந்த அணி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலும் 40 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News