விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த ரவுடி கோழி அருள் கைது- அம்பை போலீஸ் மடக்கி பிடித்தனர்
- சமீபத்தில் ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு ஒன்றில் அவரை போலீசார் தேடி வந்தனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் கோழி அருளை தேடி வந்தனர்.
நெல்லை:
பாளை பெருமாள்புரம் தாமஸ் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ் என்ற கோழி அருள். இவருக்கு சொந்த ஊர் சுரண்டையை அடுத்த பங்களா சுரண்டை ஆகும்.
இவர் மீது கொலை, கொலை முயற்சி, சமூக வலைதளங்களில் சாதி ரீதியிலான கருத்துக்களை பதிவிட்டல் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்று வெளியே வந்த நிலையில், சில வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
சமீபத்தில் ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு ஒன்றில் அவரை போலீசார் தேடி வந்தனர். அவரை பிடித்து வந்து ஆஜர்படுத்துமாறு நெல்லை மாவட்டம் அம்பை கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் கோழி அருளை தேடி வந்தனர்.
அவர் ஓசூர் பகுதியில் பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு முகாமிட்டு தனியார் விடுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் நேற்று இரவில் ஒரு விடுதியில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர். தொடர்ந்து இன்று காலை கோழி அருளை பாதுகாப்புடன் நெல்லை மாவட்டத்திற்கு ஜீப்பில் அழைத்து வந்தனர்.