தமிழ்நாடு

வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை சாதி பிரச்சனையாக பார்க்கக்கூடாது - அன்புமணி

Published On 2023-10-09 05:18 GMT   |   Update On 2023-10-09 09:06 GMT
  • வன்னியர் இட ஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. திமுக அரசு உறுதி செய்தது.
  • கல்வியில் கடந்த 30 ஆண்டுகளாக வட மாவட்டங்கள் பின் தங்கியுள்ளது.

சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்னர், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவாக சந்தித்து, வன்னியருக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த கோரி மனு அளித்தோம். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசி முடிவெடுப்பதாக சொன்னார்.

அ.தி.மு.க. ஆட்சியில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு, தி.மு.க. ஆட்சியில் உறுதி செய்யப்பட்டது. பிறகு ரத்து செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றம் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக தரவுகளை சேகரித்து ஆய்வு செய்து வழங்குங்கள் என்று சொல்லி விட்டது. தரவுகளை ஆய்வு செய்வதற்கு அதிகபட்சமாக 5 நாள்கள் போதும். ஆனால், 9 மாதங்கள் ஆகியும் தரவுகள் வரவில்லை என்று சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதில்லை.

தமிழக அரசு இந்த சட்டத்தை கொண்டு வருவார்களா என்ற சந்தேகம் எழுகிறது. இதனால், இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அழுத்தம் கொடுத்து உள்ளோம். தரவுகளை ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோர் தரவுகளை சேகரித்து தந்தால் தான் தமிழக அரசு சட்டம் இயற்ற முடியும்.

10.5 சதவீதம் இடஒதுக்கீடு சமூக நீதி பிரச்சினை, தமிழகத்தின் வளர்ச்சி பிரச்சினை தான். மிகப்பெரிய சமூகமான வன்னியர் சமூகம் முன்னேறினால் தமிழகம் வளர்ச்சி அடையும். இதை, சாதி, மதம், இனப் பிரச்சினையாக பார்க்கக்கூடாது. கடந்த 30 ஆண்டுகளாக 10, 12-ம் வகுப்புகளில் கடைசி 15 இடங்களில் வட மாவட்டங்கள் இருக்கிறது. அதிகமான குடிசைப்பகுதி, அதிக மது விற்பனை, வட மாவட்டங்களில் இருக்கிறது. இதனால், வட மாவட்டங்கள் பின்தங்கி காணப்படுகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பிற்கும், 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தமிழகத்தில் மட்டும் தான் 69 சதவீதம் இட ஒதுக்கீடு இருக்கிறது. அதை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் பல முயற்சியை செய்தது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும்.

பீகார் மாநிலத்தைவிட குறைந்த நாள்களில் செய்து முடிக்கலாம். தமிழகத்தில் சமூகநீதி பேசும் திமுக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சமூக நீதி பேசினால் மட்டும் போதாது, அதை செயல்படுத்த வேண்டும்.

காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு வேண்டும். காவிரி படுகையில் உள்ள அணைகள் அனைத்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும். தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையும் காவிரி ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும்.

உச்சநீதிமன்றம், காவிரி ஆணையம் என யார் சொன்னாலும் கர்நாடக அரசு கேட்பதாக இல்லை. அதனால், காவிரி படுகையில் உள்ள அணைகளும் காவிரி ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Tags:    

Similar News