தமிழ்நாடு

மகனை அடித்ததால் கோபம்: பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை தாக்கிய பெற்றோர் மீது வழக்கு பதிவு

Published On 2023-09-16 04:30 GMT   |   Update On 2023-09-16 04:30 GMT
  • கடந்த 13-ந் தேதி மாணவனை ஆசிரியை ஒருவர் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது.
  • இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

சேலம்:

சேலம் அழகாபுரம் ரெட்டியூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தென் அழகாபுரத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த 13-ந் தேதி இந்த மாணவனை ஆசிரியை ஒருவர் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் அந்த மாணவனின் தந்தைக்கு நேற்று தெரியவந்தது. இதனால் கோபம் அடைந்த அவர் நேற்று பகல் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் பள்ளிக்கு சென்றார்.

அங்கு மகனை அடித்த ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அவர்கள் திடீரென ஆசிரியையை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அழகாபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் மேற்கு தாசில்தார் அருள்பிரகாஷ், மாவட்ட கல்வி அதிகாரி மோகன் ஆகியோரும் நடந்த சம்பவம் குறித்த பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் சக ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவனின் தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News