2-வது முறையாக கொரோனா இல்லாத மாவட்டமானது ஈரோடு
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக 3-வது அலை ஏற்பட்டு தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியது.
கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்தது. பல நாட்கள் யாருக்கும் கொரோனா இல்லாத நிலை ஏற்பட்டது. இருப்பினும், அவ்வப்போது ஓரிருவருக்கு தொற்று ஏற்பட்டு, குணமடைந்தனர்.
கடந்த ஏப்ரல் 27-ல் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவரும் மே 4-ல் குணமடைந்தார். அதன்பின் தொற்று இல்லாத மாவட்டமானது ஈரோடு. இதன்பிறகு கடந்த, 17-ந் தேதி முதல் அடுத்தடுத்த நாளில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு 5 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்கள் அடுத்தடுத்த நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த ஒருவரும் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார். இதையடுத்து மீண்டும் ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமாகி உள்ளது.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 676 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.