தமிழ்நாடு
கொலை

இந்து முன்னணி பிரமுகர் கொலை- தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2022-05-23 09:59 GMT   |   Update On 2022-05-23 09:59 GMT
உடுமலையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிப்பாளையம் காளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சபாபதி என்பவரது மகன் குமரவேல் (வயது 24). இவர் இந்து முன்னணி உடுமலை வடக்கு நகர செயலாளராக கடந்த 4 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வந்தார். இவரது நண்பரான ஏரிப்பாளையம் விஜய் நகரைச் சேர்ந்த அஸ்வின் என்பவர் மனைவி வளர்மதி (20) மூலம் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்தின் மனைவி கவிதா ( 30) என்பவர் மகளிர் சுய உதவிக்குழுவில் பணம் பெற்றுள்ளார்.

ஆனால் அந்த பணத்தை கவிதா கட்டாமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் உடுமலை போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து 3 தவணைகளாக பணத்தைத் திருப்பி தந்து விடுவதாக ரஞ்சித் மற்றும் கவிதா உறுதி அளித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் ரஞ்சித் தனது குடும்பத்துடன் வீட்டைக் காலி செய்து விட்டு செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அஸ்வின் தனது நண்பர் குமரவேலை அழைத்துக்கொண்டு ரஞ்சித்தின் வீட்டுக்கு சென்றார். அங்கு சென்றதும் பணத்தைக் கொடுக்காமல் வீட்டைக் காலி செய்யக்கூடாது என்று ரஞ்சித்தை தடுத்துள்ளனர். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ரஞ்சித் மற்றும் அவருடன் இருந்த 4 பேர் சேர்ந்து குமரவேல் மற்றும் அஸ்வினை இரும்புக்கம்பியால் கொடூரமாக தாக்கியதுடன் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த குமரவேல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அஸ்வின் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக ரஞ்சித் மற்றும் உடன் இருந்தவர்கள் ஒரு சரக்கு லாரியில் ஏறி தப்பி சென்றனர். காயங்களுடன் துடித்த அஸ்வினை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த படுகொலை சம்பவம் குறித்து தகவலறிந்ததும் உடுமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமரவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதில் ரஞ்சித்துக்கு உதவியாக கொலை சம்பவத்தில் ஈடுபட்ட செந்தில் (31) மற்றும் ஆத்தியப்பன் (43) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ரஞ்சித் மற்றும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News