தமிழ்நாடு செய்திகள்
பாலியல் தொல்லை

மிஸ்டு கால் பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்: வேலூர் பள்ளி மாணவியை கடத்திச்சென்று பலாத்காரம்- வாலிபர் கைது

Published On 2022-02-28 11:21 IST   |   Update On 2022-02-28 11:21:00 IST
வேலூர் பள்ளி மாணவியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்த திருவள்ளூர் வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி.அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

கடந்த ஆண்டு இவரது போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. அந்த எண்ணில் மாணவி தொடர்பு கொண்டார். அப்போது

திருவள்ளூர் மாவட்டம் தரைச்சிஊத்துக்கோட்டை பழைய காலனியை சேர்ந்த மெக்கானிக் ஜான்ரோஸ் (வயது 19) என்பவர் பேசினார்.

தவறுதலாக எண் பதிவு செய்ததால் மாணவிக்கு மிஸ்டு கால் வந்து விட்டதாக அவர் கூறினார். அதற்குப்பிறகு மாணவியிடம் அடிக்கடி போன் செய்து பேசத் தொடங்கினார். பலமுறை போனில் தொடர்பு கொண்டு காதல் வலை வீசினார்.

இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொண்டனர்.

மேலும் ஜான்ரோஸ் வேலூருக்கு வந்து மாணவியை அடிக்கடி சந்தித்து விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மாணவி வீட்டில் இருந்து வழக்கம்போல பள்ளிக்கு சென்றார். அன்று வேலூருக்கு வந்த ஜான்ரோஸ் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்றுவிட்டார். பள்ளிக்கு சென்ற மகள் வீடு திரும்பாததை கண்டு அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளியில் உடன் படித்த நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினர். எங்கும் காணவில்லை. இதனால் அழுது துடித்தனர்.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். முதலில் இந்த வழக்கில் துப்பு எதுவும் துலங்கவில்லை. மாணவியின் செல்போன் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் வாலிபர் ஜான் ரோஸ் என்பவர் மாணவியுடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் ஜான் ரோஸ் வீட்டிற்கு விரைந்து சென்றனர்.

அங்கிருந்த மாணவியை மீட்டு வந்தனர். போலீஸ் விசாரணையில் மாணவியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின்கீழ் ஜான்ரோசை போலீசார் கைது செய்தனர்.

பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளை பெற்றோர்கள் கவனமுடன் கண்காணிக்க வேண்டும். இதன் மூலம் படிக்கின்ற வயதில் மாணவிகள் தடமாறுவதை தவிர்க்க முடியும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News