தமிழ்நாடு செய்திகள்
திம்பம் மலைப்பகுதியில் 2-வது நாளாக போக்குவரத்து நெரிசல் - சமூக வலைதளத்தில் பரவும் மீம்ஸ்கள்
சத்தியமங்கலம்-திம்பம் மலைப்பாதையில் இன்று 2-வது நாளாக ஏராளமான கனரக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
சத்தியமங்கலம்:
தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது.
இதேபோல் பண்ணாரி சோதனை சாவடி பகுதியிலும் 100-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இன்று காலை 6 மணி முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து விடிய, விடிய காத்திருந்த வாகனங்கள் புறப்பட்டது.
ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் திரண்டு வந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ் மற்றும் கார்கள், ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் அவர்களுக்கு தனியாக வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
பண்ணாரி பகுதியில் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பண்ணாரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மல்லிகை சாகுபடி, வாழைக்காய் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அவர்கள் இந்த பகுதியில் விளையும் மல்லிகை, வாழைக்காயை சத்தியமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
பண்ணாரி பகுதியில் ஏற்படும் நெரிசல் காரணமாக சரியான நேரத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நீண்ட நேரம் வாகனங்கள் நிற்பதால் கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சரியான நேரத்திற்கு டவுன் பஸ்கள் வர முடியாததால் மாணவ-மாணவிகளும் அவதி அடைந்து வருகின்றனர். அதோடு இல்லாமல் பண்ணாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, பண்ணாரி சோதனை சாவடியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கடந்த 2 நாட்களாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர தேவைக்கு கூட உடனடியாக செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே அரசு இந்த பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில் நேற்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பண்ணாரி சோதனை சாவடி வழியாக 1383 வாகனங்கள் சென்றுள்ளது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில் ரூ.56,430 நுழைவு கட்டணமாக வசூலிக்கப் பட்டது.