தமிழ்நாடு
ஜிம் மாஸ்டர்

பள்ளி மாணவியை மயக்கி 5 மாநிலங்களில் உல்லாசமாக சுற்றிய ‘காதல் மன்னன்’- சிக்கியது எப்படி?

Published On 2022-01-17 08:51 GMT   |   Update On 2022-01-17 08:51 GMT
சொந்த ஊரான பொம்மிகுப்பத்தில் மாணவியுடன் நரசிம்மன் தங்கியிருக்கும் தகவலை அறிந்து, போலீசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தருமபுரி:

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 28). ஜிம் மாஸ்டர். இவருக்கு 2 மனைவிகள். குடும்ப தகராறு காரணமாக 2 மனைவிகளும் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர்.

நரசிம்மன், பெங்களுருவில் ஜிம் மாஸ்டராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் தருமபுரி மதிகோன்பாளையத்தை சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவியுடன் நரசிம்மன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பழகினார்.

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் தான் நரசிம்மனுக்கும், மாணவிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாணவியிடம் பேசி பழகி வந்த நரசிம்மனுக்கு நாளடைவில் மாணவியை திருமணம் செய்ய ஆசை ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி, பெங்களூருவில் இருந்து நரசிம்மன் மோட்டார் சைக்கிளில் தருமபுரிக்கு வந்தார். பின்னர் மாணவியை தனியாக சந்தித்து பேசி, கடத்தி சென்று விட்டார்.

இதற்கிடையே வெளியே சென்ற மகள் வீட்டுக்கு திரும்ப வராததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.

இதையடுத்து மகள் மாயமானது குறித்து தருமபுரி டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால் தொடர்ந்து போலீசாரின் விசாரணை மந்தமாக நடந்து வந்ததால் பெற்றோர் அதிருப்தி அடைந்தனர்.

இதனால் சென்னை ஐகோர்ட்டில் மகள் மாயமானது குறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மாயமான மாணவி எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. எனவே இன்னும் 6 மாதத்துக்குள் மாணவியை கண்டுபிடித்து பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து மாயமான மாணவியின் வழக்கு சூடுபிடிக்க தொடங்கியது. தருமபுரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை விசாரணையில் மாணவியை ஜிம் மாஸ்டர் நரசிம்மன் கடத்தி சென்றது உறுதியானது. இதையடுத்து ஜிம் மாஸ்டரையும், மாணவியையும் கண்டு பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர்.

அப்போது நரசிம்மனின் செல்போன் நம்பரை வைத்து சிக்னல் மூலம் கண்காணித்தனர். இதில் நரசிம்மன், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பெங்களூரு, சென்னை, கேரளா, விசாகப்பட்டனம் என்ற பல்வேறு ஊர்களுக்கு மாணவியை அவர் அழைத்து சென்று வந்தது தெரிய வந்தது.

தர்மபுரியில் இருந்து கோவை வழியாக கேரளா மாநிலம் திருச்சூருக்கு பைக்கில் சென்றுள்ளனர். செல்லும் வழியில் நரசிம்மன், மாணவியின் கழுத்தில் தாலிக்கட்டி திருமணம் செய்துள்ளார். திருச்சூர், கொச்சியில் சில நாட்களாக ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.

பிறகு அங்கிருந்து பைக்கில், கர்நாடகா சென்றுள்ளார். அங்கு வேலை ஏதும் இல்லாததால், ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று, அங்கு சிறிது காலம் வாழ்ந்துள்ளனர்.

அப்போது மாணவி கர்ப்பமாகியுள்ளனர். அந்த நேரத்தில், திருப்பதியில் உள்ள ஒரு வங்கியில் நகையை ரூ.70 ஆயிரத்திற்கு அடகு வைத்துள்ளார். அந்த பணம் செலவான நிலையில் திருப்பதியில் பல்வேறு இடங்களில் செல்போன் திருட்டில் நரசிம்மன் ஈடுபட்டுள்ளார்.

ஒருமுறை பைக் திருட்டில் ஈடுபட முயன்று, போலீசாரிடம் சிக்கியுள்ளார். பிறகு திருப்பதியில் அடகு வைத்திருத்த நகையை திருப்பிக்கொண்டு, நெல்லூர், குண்டூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சென்று இருவரும் தங்கியுள்ளனர்.

பின்னர், மாணவியின் பிரசவத்திற்காக கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் சென்னை வந்துள்ளனர். பள்ளிக்கரணையில் தங்கியிருந்தபோது, ஆன்லைன் மூலம் சூதாடுவதற்காக ஒரு கடையில் பண பரிவர்த்தனை செய்துள்ளார். பின்னர், அந்த கடை உரிமையாளரை நம்ப வைத்து, ரூ.1.2 லட்சம் மோசடி செய்துள்ளார்.

சென்னையில் மாணவி, ஆண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே சென்று நரசிம்மன் தங்கியுள்ளார். அங்கு பிழைக்க வழியில்லாததால், தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் இஸ்னாபூர் கிராமத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.

இதனிடையே, திருப்பதியில் நகையை அடகு வைத்தபோது, கொடுத்த செல்போன் எண்ணை கொண்டு அவரை பின்தொடர்ந்தோம், அதன்மூலம் இஸ்னாபூரில் இருப்பதை அறிந்து கொண்டோம். அங்கு அவரை தேடிச் சென்றபோது தப்பிச் சென்றுவிட்டார்.

பிறகு சொந்த ஊரான பொம்மிகுப்பத்தில் மாணவியுடன் நரசிம்மன் தங்கியிருக்கும் தகவலை அறிந்து, அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். மாணவியை 6 மாத குழந்தையுடன் மீட்டுள்ளனர். 10-ம் வகுப்பு மாணவியை கடத்தியபின், ஜிம் மாஸ்டர் நரசிம்மன் தனது கர்நாடக பதிவெண் கொண்ட பைக் மூலம் தொடர்ந்து சுற்றித்திரிந்தார்.

அந்த பைக்கில் தான், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களுக்கு மாணவியுடன் சென்றுள்ளார். அவர் சென்ற இடங்களில் எல்லாம், 3 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு மேல் தங்குவதில்லை.

ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து இடத்தை மாற்றிக்கொண்டே, மாணவியுடன் குடும்பம் நடத்தியுள்ளார். செலவிற்காக நரசிம்மன் இதுவரை 150 செல்போன் திருட்டிலும், ஒரு பைக் திருட்டிலும் ஈடுபட்டுள்ளார். நரசிம்மன் தனது பைக்கில் சென்ற இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி, அவரை பின்தொடர்ந்ததில் டோல்கேட் உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தார்.

அந்த பதிவுகள் மற்றும் 150 சாட்சிகளிடம் விசாரித்து, இறுதியாக பொம்மிகுப்பத்தில் மடக்கி பிடித்து கைது செய்துள்ளோம்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கைதான நரசிம்மன், மாணவியையும் அவரது குழந்தையையும் அழைத்துக் கொண்டு மொத்தம் 800 கிலோ மீட்டர் தூரம் மோட்டர் சைக்கிளிலேயே சுற்றி உள்ளார். மேலும் சென்ற இடங்களில் எல்லாம் செல்போன் திருட்டு, பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளார்.

கைதான நரசிம்மனையும், மீட்கப்பட்ட மாணவியையும் தர்மபுரி மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவின்பேரில் மாணவியை கைக்குழந்தையுடன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நரசிம்மன் தர்மபுரி கிளைச் சிறையில் அடைத்தனர்.

வாழ்க்கை குறித்த புரிதல் இல்லாத 15 வயது மாணவி, ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கி கொடுத்த செல்போன் மூலம் ஒரு வாலிபரை நம்பி ஏமாந்திருக்கிறார். அதுவும், ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்த ஜிம் மாஸ்டர், அந்த மாணவியை ஏமாற்றி நாடு முழுவதும் பைக்கில் சுற்றித்திரிந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வாழ்ந்துள்ளார். இதனால், 15 முதல் 18 வயதில் உள்ள மாணவிகள் மிக கவனமுடன் இருக்க வேண்டும். ஆன்லைன் வகுப்பில் இருக்கும் குழந்தைகளை பெற்றோரும் கவனிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News