செய்திகள்
தக்காளி

மகாராஷ்டிராவில் இருந்து 25 டன் தக்காளி கோயம்பேடுக்கு வந்தது

Published On 2021-11-22 06:29 GMT   |   Update On 2021-11-22 06:29 GMT
மகாராஷ்டிராவில் இருந்து வரும் தக்காளி தரமாக உள்ளதால் சில்லரை வியாபாரிகள் அதை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
போரூர்:

கோயம்பேடு மார்கெட்டுக்கு இன்று 46 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.

ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து பாதியாக குறைந்ததால் அதன் விலை திடீரென அதிகரித்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இன்றும் மகாராஷ்டிராவில் இருந்து 2 லாரிகளில் 25 டன் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.

இன்று மொத்த விற்பனை கடைகளில் தக்காளி ஒரு பெட்டி (14 கிலோ) ரூ.1200-க்கும் மகாராஷ்டிரா தக்காளி ஒரு பெட்டி (25 கிலோ) ரூ.2200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சில்லரை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்படுகிறது.

இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜபார் பாய் கூறியதாவது:-

மகாராஷ்டிரா மாநிலத்தில் தக்காளி சீசன் தொடங்கி உள்ளது. தட்டுப்பாடு காரணமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது மகாராஷ்டிராவில் இருந்து தக்காளியை வரவழைத்து விற்பனை செய்து வருகிறோம்.

மழை பாதிப்பு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மழையடி தக்காளிகள் தான் அதிகளவில் விற்பனைக்கு வருகிறது.

மகாராஷ்டிராவில் இருந்து வரும் தக்காளி தரமாக உள்ளதால் சில்லரை வியாபாரிகள் அதை விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும் இதன் வரத்து காரணமாகவே தற்போது தக்காளி விலை மேலும் அதிகரிக்காமல் கட்டுக்குள் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News