செய்திகள்
2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கார்கள் அப்பளம் போல் நொறுங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.

சூளகிரியில் கார்கள் நேருக்கு நேர் மோதல்- 2 பேர் நசுங்கி பலி

Published On 2021-09-26 05:16 GMT   |   Update On 2021-09-26 05:16 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சூளகிரி:

திருப்பத்தூரை சேர்ந்தவர் கோபி (வயது 34). இவர் பெங்களூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.

இன்று காலை 7-45 அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காடு வந்துகொண்டிருந்தது. அப்போது பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை மீறி நிலைதடுமாறி சென்றது.

இதனால் கார் எதிரே உள்ள ரோட்டுக்கு தாறுமாறாக சென்றது. அப்போது பெங்களூரை சேர்ந்த சுமந்த் (வயது 30) காரில் வந்து கொண்டிருந்தார். இதில் 2 கார்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. மேலும் மோதிய வேகத்தில் 2 கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் வந்த கோபி மற்றும் எதிரே மற்றொரு காரில் சென்ற சுமந்த் ஆகியோர் காரின் இடுபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சூளகிரி இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான கோபி மற்றும் சுமந்த் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்துக்குள்ளான 2 கார்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News