ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் தானியங்கி எந்திரம் மூலம் ரூ.5-க்கு முகக்கவசம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான 39 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 33 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
வெளியில் செல்லும் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் முககவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முகக்கவச தானியங்கி எந்திரத்தை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.
இந்த முகக்கவச தானியங்கி எந்திரத்தை ராணிப்பேட்டை பெல் சப்ளையர்ஸ் அசோசியேசன் தயாரித்து கொடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முகக்கவசம் தட்டுப்பாடு போக்க கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவை ஏற்று தானியங்கி முகக்கவச சாதன எந்திரம் ராணிப்பேட்டையில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த தானியங்கி எந்திரத்தில் ரூ.5 சில்லரை நாணயத்தை போட்டால் முகக்கவசம் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி ஏழை எளிய பொதுமக்கள் அனைவரும் 5 ரூபாய் விலையில் தரமான முகக்கவசத்தை பெறலாம்.