செய்திகள்
பெண் இன்ஸ்பெக்டர்

போலீஸ் கணவருடன் சேர்ந்து கடைகளில் பணம் வசூல் செய்த பெண் இன்ஸ்பெக்டர்

Published On 2020-04-19 10:56 IST   |   Update On 2020-04-19 10:56:00 IST
சீர்காழியில், ஊரடங்கை பயன்படுத்தி போலீஸ்கார கணவருடன் சேர்ந்து கடைகளில் பணம் வசூல் செய்தார் பெண் இன்ஸ்பெக்டர். இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.
சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீபிரியா. இவருக்கு கொரோனா பாதுகாப்பு பணி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் இவர் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவின் கணவர் சோமசுந்தரம். இவர், திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, தனது கணவர் சோமசுந்தரத்துடன் தங்களுக்கு சொந்தமான காரில் சீர்காழியில் உள்ள பல்வேறு கடைகளுக்கு சென்று உள்ளார்.

அந்த கடைகளில் சமூக இடைவெளியை கடைப் பிடிக்காமல் கூட்டம் கூடுவதாக கடைக்காரர்களை மிரட்டி கடந்த சில நாட்களாக தொடர்ந்து பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள், இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரி ஒருவர் சீர்காழியில் உள்ள கடைக்காரர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவர், தனது விசாரணை அறிக்கையை உயர் அதிகாரிகளிடம் அளித்தார்.

பெண் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவும், அவரது கணவர் சோமசுந்தரமும் கடைக்காரர்களிடம் பணம் வசூல் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். 

Similar News